மதுராந்தகம்: தமிழகத்தில் 9 மாவட்டங்களில் முதல் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நேற்று முடிவடைந்தது. இந்நிலையில், இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இதனால், இரண்டாம் கட்ட உள்ளாட்சித் தேர்தல் செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெறும் இடங்களில் நேற்று மாலை 5 மணியுடன் பிரசாரம் முடிவடைந்தது. இதில், செங்கல்பட்டு 10வது வார்டு மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிடும் மாலதி, அச்சிறுப்பாக்கம் 8வது வார்டு ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிடும் சிலம்பரசன் ஆகியோரை ஆதரித்து, நேற்று மாலை இறுதிக்கட்ட பிரசாரத்தில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்துகொண்டார்.
அப்போது, அச்சிறுப்பாக்கம் வடக்கு ஒன்றியம் ஊனமலை கிராமத்தில் வாக்கு சேகரிக்க சென்ற அவருக்கு கிராம மக்கள் 100க்கும் மேற்பட்டோர் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பளித்தனர். இதனைத் தொடர்ந்து, வேட்பாளர் மாலதி, சிலம்பரசன் ஆகியோருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்து கிராம மக்களிடையே உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்து பேசினார். இந்த நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, காஞ்சிபுரம் எம்பி ஜி.செல்வம், அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல், பகுதி செயலாளர் பி.கே.மூர்த்தி, ஒன்றிய செயலாளர் தம்பு உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.